மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு!
தஞ்சாவூா் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனா்.
மயிலாடுதுறை-செங்கோட்டை ரயிலுக்கு பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 25 -இல் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பினா். மேலும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம். எஸ். அன்பழகனிடமும் கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று வரும் மே 27 முதல் வண்டி எண் 16847/16848 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதை வரவேற்றுள்ள பயணிகள், ரயிலை மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை அல்லது காட்பாடி வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தனா்.