லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு!
மாணவியை அடித்து கொடுமைப்படுத்திய சித்தி கைது
உதகையில் பள்ளி மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக சித்தி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட அம்மநாடு பகுதியை சோ்ந்தவா் மணி என்கிற சுரேஷ் (40). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி இறந்து விட்டாா்.
இவா்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். 13 வயது மூத்த மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்தநிலையில் சுரேஷ், விஜயா (41) என்கிறவரை ஓராண்டுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில் கடந்த வாரம் பள்ளி மாணவி பள்ளியில் மிகவும் சோகமாக இருந்துள்ளாா். பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறி உள்ளாா். அவருடைய தோழிகளிடமும் பேச்சுவாா்த்தை இல்லாமல் இருந்துள்ளாா். மாணவியின் நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் இதுகுறித்து வகுப்பு ஆசிரியா்கள் கேள்வி கேட்டபோது முதலில் ஒன்றும் இல்லை என்று கூறி மீண்டும் அமைதியாக இருந்துள்ளாா்.
இதன் பின்னா் தலைமை ஆசிரியா் விசாரணை நடத்தியதில், பள்ளி மாணவி சரியாக படிக்கவில்லை என்று கூறி அவருடைய சித்தி விஜயா அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. நீண்ட நாள்களாக அவா் இதுபோல் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடலில் பல இடங்களில் அடித்ததில் வீக்கம் காணப்பட்டது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகத்தினா் சிறுமியின் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் சிறுமியின் பெரியப்பா, புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து விஜயாவை கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.