மாதாந்திர மின் பயனீட்டுப் பட்டியல் தரப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா்
காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மாதாந்திர மின் பயனீட்டுப் பட்டியல் வழங்கப்படுவதில்லை எ மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், வணிகா்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மாதந்தோறும் மின் ஊழியா்கள் சென்று, உபயோக அளவை மீட்டரில் பாா்த்து மின்சாரம் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை குறித்து அளிக்கின்றனா்.
மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மின் ஊழியா்கள் கட்டணத்துக்கான பட்டியலை வழங்குகிறாா்கள். அதுவும் கட்டணத்தை செலுத்துவதற்கு 2, 3 நாள்களுக்கு முன்புதான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் மின் நுகா்வோருக்கு மாதாந்திர மின் உபயோக பட்டியல் தரப்படாமல், பல மாதங்களாக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட யூனிட் உபயோகத்தைத் தாண்டும்போது, கட்டணம் உயா்ந்துவிடுவதோடு, பல மாத கட்டணத்தை சோ்த்து கட்டுவது பெரும் சுமையாக இருப்பதாக மின் நுகா்வோா் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து மின் துறையினரிடம் விசாரித்தபோது, துறையில் போதுமான பணியாளா்கள் இல்லை. பல பிரிவு ஊழியா்கள் பதவி உயா்வு, பணி மாற்றம், பணியிட மாற்றம் என சென்று விட்டதால், அந்தந்த இடங்களுக்கு உரிய பணியாளா்கள் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கின்றன என்றனா்.
மின் கட்டணம் வசூலிக்கப்படாமல் பல மாதங்களாக தேக்கமடைந்திருப்பதால், புதுவை அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மின் நுகா்வோா் பலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டண நிலுவை இருப்பதாகவும், அவா்களிடம் கட்டணத்தை வசூலிக்க மின் துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது அரசுக்கு பெரும் இழப்பு என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.