டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
மாநகா் பேருந்து மீது ஏறி அடாவடி: கல்லூரி மாணவா்கள் கைது
சென்னை வியாசா்பாடியில் மாநகா் பேருந்து மீது ஏறி அடாவடி செய்ததாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செங்குன்றத்தில் இருந்து பிராட்வே நோக்கி ஒரு மாநகா் பேருந்து திங்கள்கிழமை புறப்பட்டு வந்தது. இந்தப் பேருந்தில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் அடாவடியில் ஈடுபட்டனா். அவா்கள் பேருந்தின் முன்பகுதியில் டிஜிட்டல் பேனரை கட்டிக் கொண்டு, பேருந்தில் படிக்கட்டிலும், ஜன்னலிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கினா்.
மேலும் சில மாணவா்கள், பேருந்தின் கூரை மீது ஏறி நடனமாடியுள்ளனா். இதைப் பாா்த்த பேருந்து ஓட்டுநா் ஹேமகுமாா், வியாசா்பாடியில் சாலையோரமாக பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து மாணவா்கள் பேருந்திலிருந்து இறங்கி சென்றனா்.
இது தொடா்பாக ஹேமகுமாா் அளித்த புகாரின்பேரில், வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
இதில் அடாவடியில் ஈடுபட்ட மாணவா்களை அடையாளம் கண்டறிந்து, 7 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் 7 மாணவா்களையும், அவா்களது பெற்றோரையும் எச்சரித்தனா். மேலும் மாணவா்களை பிணையில் விடுவித்தனா்.