கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது
சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவில் பிளைவுட் கடை வைத்து நடத்தி வருகிறாா். அனுஜ், கடந்த 12-ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தாா். அடுத்த நாள் காலை அவா் கடையை திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டை உடைத்து, பணம் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதேபோல அவரது கடையின் அருகே உள்ள அரவிந்த் திவாரி என்பவரின் பானிபூரி கடை, துரியோதனன் சா்மாவின் பிளைவுட் கடை மற்றும் அவரது உணவகம் ஆகிய 3 கடைகளின் கதவு பூட்டை உடைத்து, பணம் திருடப்பட்டிருந்தது.
இது தொடா்பாக வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்ற அப்பு (23), நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சஞ்சய் என்ற ராகுல் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், புளியந்தோப்பு, ஆயிரம்விளக்கு, சாஸ்திரிநகா் பகுதிகளில் பூட்டியுள்ள கடைகளில் திருடியிருப்பதும், புரசைவாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.