மாலேகான்: `RSS தலைவர் மோகன் பகவத்தை கைதுசெய்ய சொன்னார்கள்' - தீவிரவாத தடுப்புப்பிரிவு மாஜி அதிகாரி
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவித்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை விசாரணை நடத்தி வந்தது. இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டது.
பின்னர் தேசிய புலனாய்வு ஏற்று விசாரித்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து இருப்பதால், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இந்து அமைப்புகளை வேண்டுமென்றே இவ்வழக்கில் சிக்க வைத்ததாக பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது.

மோகன் பகவத்தை கைது செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது!
இவ்வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு படையில் இடம் பெற்று இருந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் முஜாவார் தெரிவித்து இருக்கும் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் சோலாப்பூரில் அளித்த பேட்டியில், ''காவி பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் மூலம் தீவிரவாத தடுப்பு படையின் போலி விசாரணை அம்பலமாகி இருக்கிறது.

போலி அதிகாரியின் தலைமையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. ராம் கல்சங்ரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதார் மற்றும் பகவத் உட்பட பல முக்கிய பிரமுகர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். மோகன் பகவத்தை கைது செய்ய செல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அந்த உத்தரவை நான் பின்பற்றவில்லை. எனவே என் மீது போலி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் எனது போலீஸ் வாழ்க்கை சீரழிந்தது. நான் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.
அப்போது தீவிரவாத தடுப்பு படை எதைப்பற்றி எதற்காக விசாரணை செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்களின் உத்தரவு அமல்படுத்தும் வகையில் இல்லை. காவி பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லை. அவை போலியானது'' என்று தெரிவித்தார்.