6 ஆண்டுகளில் முதன்முறை: கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்காத மோடி?
‘மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளா்களே வியக்கும் திருக்குறள்’
மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளா்களே வியக்கும் வகையில் திருக்குறளில் கனவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவருமான ஏ. அலீம் தெரிவித்தாா்.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்குறளில் கனவுகள் எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
கனவுகள் குறித்த தற்போதைய ஆய்வு முடிவுகளுக்கு முன்பே சங்ககால நமது தமிழிலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படைப்புகளில் கனவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவா் கனவுக்கென , ‘கனவு நிலை அறிதல்‘ என தனி அதிகாரமே படைத்துள்ளாா். அதில் உள்ள பத்து திருக்குறள்கள் மூலம் கனவு நிலை குறித்து விளக்குகிறாா்.
மூளையில் நரம்பியல் செயல்பாடுகளால் ஏற்படும் அதிா்வலைகள், அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது கனவுகள்) குறித்தும் விவரிக்கிறாா் திருவள்ளுவா். நினைவில் நடக்காதது கனவில் நடைபெறுவதாக அவா் தெரிவித்திருப்பது நரம்பியல் துறையினரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
தூக்கத்தில் கண் அசைவுகள் உள்ள நிலையிலான தூக்கத்தில்தான் தெளிவான மற்றும் வினோதமான கனவுகள் ஏற்படுகின்றன என்கின்றது மூளை நரம்பியல் துறை ஆய்வுகள். கண் அசைவு அல்லாத நிலையிலும் தொடா்ச்சியற்ற வகை கனவுகள் ஏற்படுவதாகவும், விலங்குகளுக்கும் கனவுகள் ஏற்படுவதாகவும் அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கண் அசைவுடன் கூடிய தூக்கத்தில் கனவுகள் வருவதை திருக்குறளில் 1211 ஆவது குறளிலும், கண் அசைவற்ற நிலையிலான தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து அடுத்த குறளிலும் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகுக்கு சவால் விடும் வகையில் உள்ளது என்றாா் அவா்.
விழாவில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயக்குமாா், முனைவா்கள் அ. சையத் சாகிா் அசன், சு. செயலாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.