மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இருக்க மாட்டார்கள்: மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி விதி 169-கீழ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனால் கடும் அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அமளியின்போது ஆளும் கட்சியினர் தண்ணீர் பாட்டிலை வீசியதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவையில் முதல்வர் மமதா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அவர் மேலும் பேசுகையில், “பாஜக தவிர்க்க முடியாத தோல்வியைச் சந்திக்கும். வங்காள மக்களுக்கு எதிராக மொழியியல் பயங்கரவாதத்தை நடத்தும் எந்தக் கட்சியும் மேற்கு வங்கத்தில் வெற்றிபெற முடியாது.
பாஜக ஒரு வாக்குத் திருட்டுக் கட்சி, அதன் மையத்திலே ஊழல் நிறைந்துள்ளது. வங்காள மக்களை துன்புறுத்திவதிலும் ஏமாற்றுவதிலும் வல்லமைப் பெற்றதாகவுள்ளது.
வங்காள மக்களை துன்புறுத்தும் பாஜகவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இல்லாத சூழல் விரைவில் வரும். மக்களே அதை உறுதி செய்வார்கள்” என்றார்.
வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!