மொழி விவகாரம்: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்!
தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார்.
கேரளத்தில் தக் லைஃப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன்,
கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நான் கூறுவது பதில் அல்ல, விளக்கம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ''பல மொழி வரலாற்று அறிஞர்கள் கூறியதைத்தான் நான் கூறினேன். தக் லைஃப் படத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. என் படத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேசத் தகுதி இல்லை; என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.
வடக்கில் இருந்துபார்க்கும்போது அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். தென்குமரியில் இருந்து பார்க்கும்போது நான் கூறியது சரியானதாக இருக்கலாம். ஆனால் மூன்றாவது கோணம் ஒன்று உள்ளது. அது மொழி அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கூற வேண்டியது. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'' எனக் குறிப்பிட்டார்.
கன்னட மொழி குறித்துப் பேசிய கமல்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் கலந்துகொண்டார்.
மேடையில் கமல் பேசிக்கொண்டிருக்கும்போது சிவராஜ் குமாரைப் பார்த்து, ''சிவராஜ் குமாருடைய குடும்பம் கர்நாடத்தில் உள்ள எனது குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்துள்ளார். அதனால்தான் எனது பேச்சைத் தொடங்கும் சமயத்தில் உறவே, உயிரே, தமிழே என்று குறிப்பிட்டேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் எனப் பேசியிருந்தார்.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க | ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன்..!