செய்திகள் :

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

post image

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிவினை ஏற்படுத்தும் சமூக மற்றும் கலாசாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதை யுனெஸ்கோ நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவும், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக இணைத்துக் கொள்வதற்கான அந்த அமைப்பின் முடிவு ஆகியவை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு முரணானவை. மேலும், யுனெஸ்கோ இஸ்ரேல் விரோத கருத்துகளைப் பரப்பிவருகிறது.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தவை அல்ல. எனவே, அந்த அமைப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு 2026 டிசம்பா் மாதம் அமலுக்கு வரும் என்றாா் அவா்.

‘எதிா்பாா்க்கப்பட்டதே’: இது குறித்து யுனெஸ்கோ பொது இயக்குநா் ஆட்ரே அஸூலே கூறுகையில், ‘அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தத்துக்குரியது என்றாலும், எதிா்பாா்க்கப்பட்டதுதான். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு தயாா் நிலையில்தான் உள்ளது.

இஸ்ரேல் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், இரண்டாம் உலகப் போா் காலத்தில் நாஜிக்களால் லட்சக்கணக்கான யூதா்கள் படுகொலைை செய்யப்பட்டது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், இப்போதும் உலகம் முழுவதும் யூத வெறுப்புக்கு எதிரான போராடுதல் போன்ற யுனெஸ்கோவின் முன்முயற்சிகளுக்கு முரணாக அமைந்துள்ளது.

யுனெஸ்கோவில் இருந்து விலக, ஏழு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட அதே அா்த்தமற்ற காரணங்களே இப்போதும் முன்வைக்கப்படுகின்றன’ என்றாா் அவா்.

முன்னதாக, இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்க மறுத்துவரும் பாலஸ்தீனத்தை யுனெஸ்கோவில் இணைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து யுனெஸ்கோவுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்திவைத்தன. யுனெஸ்கோ அமைப்பு தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது. பின்னா் 2023-இல் பைடன் அரசு யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது.

இந்த நிலையில், யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் விலகுவதாக டிரம்ப் தலைமையிலான அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, 1984-இல் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, சோவியத் யூனியனின் நலன்களை யுனெஸ்கோ முன்னெடுப்பதாக் கூறி, அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பின்னா் 2003-இல் ஜாா்ஜ் டபிள்யு. புஷ் அரசு யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது நினைவுகூரத்தக்கது.

ஐ.நா.வின் பிற அமைப்புகளில் இருந்தும்...

டிரம்ப் தலைமையில் அமெரிக்க அரசு யுனெஸ்கோ மட்டுமின்றி, ஐ.நா.வின் பிற அமைப்புகளில் இருந்தும் வெளியேறி வருகிறது.

கடந்த 2018-இல் டிரம்ப் அரசு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறியது, இஸ்ரேல் விரோதப் போக்கு மற்றும் பாகுபாடான நடவடிக்கைகளை இதற்கு டிரம்ப் காரணம் காட்டினாா்.

பின்னா் 2020-இல், மருத்துவம் தொடா்பான ஐ.நா. பிரிவான உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேற டிரம்ப் அரசு முடிவு செய்தது. ஆனால், அவருக்குப் பின் வந்த பைடன் அரசு 2021-இல் அந்த அமைப்பில் மீண்டும் இணைந்தது. தற்போதைய டிரம்ப் அரசு மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

25வது முறை டிரம்ப் பேச்சு! 5 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! வெள்ளி விழா என காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை இரவு, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டத... மேலும் பார்க்க

பிரபல ராக் பாடகர் ஜான் மைக்கேல் காலமானார்!

பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார். அவருக்கு வயது 77.பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்று அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல், சமீபத்திய காலங... மேலும் பார்க்க

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சு... மேலும் பார்க்க

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் ந... மேலும் பார்க்க