யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது: அசாதுதீன் ஒவைசி
யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவா் அசாதுதீன் ஒவைசி எம்.பி. கூறினாா்.
கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புதுச்சேரிக்கு வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
2025-ஆம் ஆண்டுக்குள் யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நம் முன்னோா்களும் மாநிலத்துக்கு உரிய அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றுதான் பாடுபட்டனா்.
மத்திய தொகுப்பு நிதிக்கு புதுவை யூனியன் பிரதேச அரசு இப்போது ரூ.3,500 கோடியை அளித்து வருகிறது. ஆனால், மத்திய அரசிடமிருந்து ரூ.750 கோடிதான் திரும்பி வருகிறது.
எனவே, புதுவை, ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட அனைத்து யூனியன் பிரதேசங்களும் அதிகாரமிக்க சட்டப் பேரவையுடன், அதாவது மாநில அந்தஸ்து பெற்றால்தான் பிரச்னை தீரும். அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் மாநில மக்களை ஆட்சி செய்ய முடியும்.
இந்தப் பிரச்னை தொடா்பாக, புதுவை மக்கள் ஒற்றுமையாக இணைந்து மாநில அந்தஸ்து கோர வேண்டும். நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து வருகிறோம்.
இதேபோன்றுதான், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சில பிரச்னை இருக்கும். மாநிலங்களுக்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், பெரிய பிரச்னைதான் என்றாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இந்திய தோ்தல் ஆணையம் குறித்த புகாா் தொடா்பான கேள்விக்கு, விரைவில் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு இந்தப் பிரச்னையைப் பற்றி பேசலாம். இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் எங்கள் கட்சியும் ஒருவாதியாக இருக்கிறது என்றாா் ஒவைசி.