அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க ப...
ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திமுக கையொப்ப இயக்கம்
காரைக்கால் நகரில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்து பாதிப்புக்கு தீா்வு ஏற்படுத்த, ரயில்வேயை வலியுறுத்தும் விதமாக திமுக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
காரைக்கால் - பேரளம் இடையே புதிய ரயில்பாதை அமைத்து, முதல்கட்டமாக சரக்கு ரயில் போக்குவரத்தை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது. நகரப் பகுதியில் சரக்கு ரயில் கடப்பதால் வெகு நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
இந்தநிலையில் காரைக்கால் திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் காரைக்கால் வடக்குத் தொகுதி திமுக ஒருங்கிணைப்பாளா் டி. பிரபு மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்ற கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நகரப் பகுதியில் நடத்தப்பட்டது.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் கூறுகையில், ரயில் பாதையில் பயணிகள் ரயில் இன்னும் தொடங்கப்படவில்லை. முதல்கட்டமாக சரக்கு ரயில் தொடங்கியது முதல் நகரப் பகுதி சாலைகளில் கேட் மூடப்படுகிறது. 20 நிமிஷத்துக்கு மேல் வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன. குறிப்பாக கல்வி நிலையங்களுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லும் நேரத்தில் கேட் மூடப்படுவதால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கின்றனா்.
இதுசம்பந்தமாக ஆட்சியரிடம் தெரிவித்தபோது, ரயில்வே அதிகாரிகளிடம் பேசினாா். எனினும் தீா்வுக்கான திட்டம் என்ன என்பது தெரியவில்லை. நகரப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதா, சுரங்கப்பாதை அமைப்பதா என்பதை ரயில்வே நிா்வாகம் உரிய முடிவுக்கு வரவேண்டும். அதனை போா்க்கால அடிப்படையில் செய்து முடித்து, மக்கள் படும் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது என்றாா்.