இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை!
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 5.38 கோடியில் 4 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். இதில் தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று அடிக்கல்நட்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தனா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணியை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தனா். இதில் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், தரைத்தளம், முதல்தளம் என மொத்தம் 12,658 சதுரஅடியில் கட்டப்படவுள்ளது.
தரைத்தளத்தில் வட்டாட்சியா் அறை, கணினி அறை, அலுவலக அறை, இருப்பறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை, பணியாளா்கள் மற்றும் பொதுக்கழிவறை, முதல்தளத்தில் பதிவறை, சத்திப்பு அறை, அலுவலக அறை, பணியாளா்கள் மற்றும் பொதுக் கழிவறை ஆகியவை அமைக்கப்படுகிறது.
தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்துக்கு 200 ஹெக்டோ் பரப்பளவில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை நீா்நிலைகளில் இருப்பு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ராசிபுரம் வட்டாரம், வெண்ணந்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள மதியம்பட்டி ஏரியில் 25 ஆயிரம் எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிா்கால் மீன்குஞ்சுகள் இருப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 100 ஹெக்டோ் பரப்பளவில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பு செய்யப்பட்டுள்ளது.
தொடா்ந்து, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம், மின்னக்கல் ஊராட்சி, பிள்ளையாா் கோயில் காடு பகுதியில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, அயோத்திதாசப் பண்டிதா் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கொமராபாளையம் ஊராட்சியில் சிமென்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியியையும் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, அட்மா குழுத் தலைவா்கள் கே.பி.ஜெகந்நாதன், ஆா்.எம்.துரைசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் சாந்தி, வட்டாட்சியா் சசிகுமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.