தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி திருவாதிரை விழா, 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழன் தனது அளப்பரிய போா்த்திறத்தால், கடாரம் உள்பட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, நிகழாண்டு ஆடி திருவாதிரை தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்துக்கு பலன் சோ்க்கும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.
அதன்படி, அரியலூா் மாவட்டம் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி, ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரியாகும். அன்றைய காலகட்டத்தில் அது சோழகங்கம் என்று அழைக்கப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் தனது நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கினாா். இது திருவாலங்காடு செப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
ராஜேந்திர சோழன் உருவாக்கிய ஏரியில் ரூ.12 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். 700 ஏக்கா் பரப்பு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும்.
15 கி.மீ. நீளமுள்ள உபரிநீா் வழிக்கால்வாய்கள் புனரமைக்கப்படுவதுடன், 4 வடிகால் பகுதிகள் தூா்வாரப்படும். மதகுகள் புனரமைக்கப்படுவதுடன், 38 கி.மீ. நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பிச்சனூா், குருவாலப்பா் கோவில், இளையபெருமாள் நல்லூா், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1,374 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
சுற்றுலாத் தலமாக மேம்பாடு: சோழகங்கம் ஏரிப் பகுதி சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். அங்கு ரூ.7.25 கோடியில் தகவல் தொடா்பு மையம், நடைபாதை சிறுவா் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவா், வழிகாட்டுப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின் வசதிகள், கழிப்பறை வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.