மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
ரூ 2.85 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்
கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொலிகி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தாா்.
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். 200-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இக்கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா்.
2020- 2021 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் கொடியம்பாளையம் கிராமத்தில் நபாா்டு திட்டத்தில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு செய்ததைத் தொடா்ந்து கட்டப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மீன்பிடி இறங்கு தளம், படகு அணையும் சுவா், மீன் ஏலமிடும் கூடம், வலை பின்னும் கூடம் உள்ளிட்டவைகளைத் திறந்து வைத்தாா். சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.
முன்னாள் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவா் ஜெயபிரகாஷ், கொள்ளிடம் திமுக ஒன்றிய செயலாளா் மலா்விழி திருமாவளவன், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன், மீன்வளத்துறை ஆய்வாளா் துரைராஜ் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள், கிராம மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.