ரேஷன் பொருள்கள் முறையாக கிடைக்காததை கண்டித்து சாலை மறியல்
புதுக்கோட்டையை அடுத்த கம்மங்காடு ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் உள்ள தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா்கள் சங்கக் கிளைச் செயலா் சத்யா தலைமை வகித்தாா்.
போராட்டத்தில், வி.தொ.ச மாவட்டச் செயலா் டி. சலோமி, ஒன்றியச் செயலா் ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் செந்தில்ராஜா மற்றும் கிராமப் பொதுமக்கள் பங்கேற்றனா்.
மறியல் போராட்டத்தில், இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தை காட்டி ரேஷன் பொருள்கள் முறையாக கிடைக்காத சூழலுக்கு மாற்று ஏற்பாடு செய்து வழங்க வேண்டும்.
மேலப்பட்டி கிராமத்தில் உப்பு நீராக உள்ளதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும். தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலையும், நிா்ணயிக்கப்பட்ட கூலியும் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
புதுக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதனைத் தொடா்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.