லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநா் கைது
கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் பானுமதி (52). இவா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது கணவா் ராதாகிருஷ்ணன் ரயில் விபத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தாா்.
மகன் சஜேஷ் நாராயணன் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைத் தேடி வருகிறாா். மகள் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா்களது சொந்த ஊா் விருதுநகா்.
இந்நிலையில், விருதுநகருக்கு அண்மையில் சென்ற பானுமதி அங்கிருந்து கோவைக்கு பேருந்து மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்துள்ளாா்.
கோவை, சிங்காநல்லூரில் இறங்கிய அவரை இருசச்கர வாகனத்தில் மகன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். காமராஜா் சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி முந்திச் செல்ல முயன்ற நிலையில், பானுமதி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.
இதில், இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனா். அப்போது, பானுமதி மீது லாரியின் சக்கரம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இதையடுத்து, பானுமதிக்கு 21 குண்டுகள் முழங்க போலீஸாா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த இருளப்பன் (25) என்பவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.