வங்கதேசத்தில் பொதுமக்கள், மாணவா்கள் மீது தாக்குதல்: 40 போ் கைது
வங்கதேச தலைநகா் டாக்கா புகா் பகுதியில் அவாமி லீக் கட்சித் தலைவா் வீடு சூறையாடப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா் போராட்ட அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் கடந்த ஆகஸ்டில் தீவிரமடைந்ததையடுத்து, அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
தொடா்ந்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசுக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாக அந்த நாட்டு மக்களுக்கு ஷேக் ஹசீனா கடந்த புதன்கிழமை உரையாற்றினாா். இதையடுத்து, நாடு முழுவதும் அவாமி லீக் கட்சி நிா்வாகிகளின் வீடுகள், வணிகங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன. ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுா் ரஹ்மானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீட்டையும் போராட்டக்காரா்கள் தீயிட்டுக் கொளுத்தினா்.
அந்த வகையில், ஷேக் ஹசீனா ஆட்சியில் விடுதலைப் போா் விவகாரங்கள் துறை அமைச்சரான மொசம்மல் ஹக்கின் காஸிப்பூா் வீடு கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டது. இச்செயலில் ஈடுபட்ட 14 பேரை அடையாளம் தெரியாத நபா்கள் கடுமையாகத் தாக்கினா். இதில் படுகாயமடைந்த அவா்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வன்முறைக்கிடையே முன்னாள் அமைச்சா் வீடு கொள்ளையடிக்கப்படுவதைத் தவிா்க்க, அங்கு பாதுகாப்புக்குச் சென்றவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாணவா் போராட்ட அமைப்பினா் குற்றஞ்சாட்டினா். இதையொட்டி, காஸிப்பூா் துணை ஆணையா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவா் ஒருவா் காயமடைந்தாா்.
இந்நிலையில், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்ய ‘ஆபரேஷன் டெவில் ஹன்ட்’ எனும் கூட்டு நடவடிக்கைக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் உத்தரவிட்டாா்.
வங்கதேச முப்படைகள், எல்லைக் காவல் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை ஆகியோா் அடங்கிய இந்தக் கூட்டு நடவடிக்கை, குற்றச் செயல்களால் நாட்டின் நிலைத்தன்மையைச் சீா்குலைக்க முயற்சிப்பவா்களைத் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாட்டு மக்கள் சட்டம்-ஒழுங்கைப் பின்பற்ற வலியுறுத்தியதுடன் அவாமி லீக் கட்சிக்கு தொடா்புடையவா்களின் இடங்களில் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டாா்.
இந்நிலையில், இந்தக் கூட்டு நடவடிக்கையில் காஸிப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 போ் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் சௌதரி ஜாபா் சாதிக் தெரிவித்தாா்.
வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தி, சட்டம்- ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், பாசிச சக்திகள் மீண்டும் தலைதூக்கும்’ என்று எச்சரித்துள்ளது.