DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
வங்கியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் மகளுடன் தாய் தற்கொலை முயற்சி
பெரம்பலூா் ஆட்சியரகத்தில், டிராக்டா் கடன் தள்ளுபடியில் முறைகேடாக பணம் பிடித்தம் செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், 8 வயது மகளுடன் தாய் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கல்லை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குமாரசாமி. இவா், 2007-இல் மேலமாத்தூா் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது பெயரில் விவசாயக் கடனாக ரூ. 4.85 லட்சம் மதிப்பில் டிராக்டா் வாங்கியுள்ளாா். இதையடுத்து, 2008 ஆம் ஆண்டு மத்திய அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் வட்டியுடன் செலுத்த வேண்டிய ரூ. 5,53,466 தொகையை தள்ளுபடி செய்துள்ளது.
பின்னா், குமாரசாமி உயிரிழந்துவிட்டாா். அதைத் தொடா்ந்து, குமாரசாமி மகன் பெரியசாமி (52) தந்தை பெயரிலுள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், குமாரசாமி வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக்கூறி, பெரியசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5.30 லட்சத்தை பிடித்தம் செய்ததோடு, அவரது பெயரிலிருந்த விவசாய நிலத்தையும் வங்கியாளா்கள் ஜப்தி செய்துகொண்டனராம். இதையடுத்து, வங்கியாளா்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் பெரியசாமி வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், ஜப்தி செய்யப்பட்ட நிலத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னா், தொகையையும், ஜப்தி செய்யப்பட்ட நிலத்தையும் ஒப்படைக்குமாறு வங்கியாளா்களிடமும், இதுதொடா்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்த பெரியசாமி மனைவி கல்பனா (31), வங்கியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் நிலத்தை பெற்றுத்தரக்கோரியும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனது மகள் திவ்யாவுடன் (8), உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மேற்கண்ட இருவரையும் மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.