திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
வனப் பகுதி கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகள்: தமிழக அரசு ஆலோசனை
சென்னை: வனத் துறைக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்றுவர வசதியாக மலைப்பாதை அமைப்பது, வழுக்கும் பாறைகள் அமைந்துள்ள இடங்களில் கைப்பிடிகள் ஏற்படுத்துவது, மலை மீதுள்ள ஏழு ஓடைகளில் இரும்புப் பாலங்கள் அமைப்பது ஆகியன குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கள்ளழகா் கோயில் முதல் மலைமேல் அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயில் வரை சாலையை சீரமைப்பது, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்று மலைப்பாதை அமைப்பது, ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது ஆகியன பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கம்பிவட ஊா்தி அமைத்திட வனத் துறைக்குச் சொந்தமான நிலம் வழங்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதேபோன்று வனத்துறைப் பகுதிகளுக்கு உட்பட்டு வரக்கூடிய கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு உட்பட பலா் பங்கேற்றனா்.