குற்றப்புலனாய்வுத் துறை சட்ட ஆலோசகா் பணி: பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்
வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர்
அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில டி20 தொடர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக இருந்துள்ளார். டி20 போட்டிகளில் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பது வழக்கம். அந்த மாதிரியான சூழலில் அணியில் முக்கியமான பந்துவீச்சாளரை நம்பியிருப்பது மிகவும் முக்கியம். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக சிறப்பாக விளையாட எதிரணியினர் சிரமப்படுகின்றனர். அவர் மட்டுமல்லாது, ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஷர் படேலும் சிறப்பாக பந்துவீசினர்.
இதையும் படிக்க: தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!
ஒரு பேட்ஸ்மேனாக 4 - 5 இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரது மனநிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். ஆனால், அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், உங்களால் அணிக்காக போட்டியை வென்று கொடுக்க முடியும் என எனக்கு கௌதம் கம்பீரும், சூர்யகுமார் யாதவும் ஆதரவளித்தனர் என்றார்.
நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரின் விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.