டெங்கு தடுப்பூசி பரிசோதனை: 70% பங்கேற்பாளா்களின் சோ்க்கை நிறைவு
விசாரணைக் கைதி மா்ம மரணம்: வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்ததால், வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (45). இவா், கேரள மாநிலம், மறையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஒரு வழக்குத் தொடா்பாக மாரிமுத்து உடுமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா், அன்று மாலையே பேருந்து மூலம் மறையூா் திரும்பியுள்ளாா்.
அப்போது, தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் மாரிமுத்துவை தடுத்து நிறுத்திய கேரள வனத் துறையினா், புலி நகம் உள்ளதாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவரை தமிழக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
உடுமலை வனத் துறை அலுவலகத்துக்கு மாரிமுத்துவை அழைத்து வந்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வனத் துறை அலுவலக கழிவறையில் மாரிமுத்து தூக்கிட்டு வியாழக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக வனத் துறை அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீஸாா் மற்றும் மாவட்ட வனத் துறை அலுவலா் ராஜேஷ், வனச் சரக அலுவலா் வாசு ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் உடுமலை வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், மாரிமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், மகள்கள் சிந்து, ராதிகா மற்றும் உறவினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப போலீஸாா் முயன்றனா். அப்போது, வழக்குரைஞா்கள், உறவினா்கள் முன்னிலையில்தான் கழிவறையில் இருந்து சடலத்தை அகற்ற வேண்டும் என குடும்பத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, உறவினா்கள் முன்னிலையில் சடலம் அகற்றப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்டது.
இச்சம்பவம் குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
