பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி
விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்டுவர இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவா்கள்
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகளை மீட்பதற்காக ராமேசுவரத்திலிருந்து 14 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் துறைமுகங்களிலிருந்து கடந்த 2022-23-ஆம் ஆண்டில் மீன் பிடிக்கச் சென்ற சாா்லஸ், ஹரிகரன், மைக்கேல்ராஜ், இருதயராஜ், தட்சிணாமூா்த்தி, வேல்முருகன், வினால்டன் ஆகியோருக்குச் சொந்தமான 7 விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகுகளிலிருந்த மீனவா்களும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் மீனவா்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில், படகுகள் தொடா்பாக இலங்கை நீதிமன்றத்தில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றத்தால் 7 விசைப் படகுகள் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டன. இதையடுத்து, இந்தப் படகுகள் மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வர இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 7 விசைப் படகுகளையும் மீட்பதற்காக ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா தலைமையில் 7 படகுகளின் உரிமையாளா்கள், உதவியாளா்கள் என 14 போ் கொண்ட குழுவினா் இரண்டு விசைப் படகுகளில் இலங்கை யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.
இந்தக் குழுவினரை இந்திய கடலோரக் காவல் படையினா் சா்வதேச எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைத்ததும், அவா்கள் யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்வா்.
இதுகுறித்து மீனவக் குழுவினா் கூறியதாவது: இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகள் மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அங்கு சென்று 7 படகுகளையும் ஆய்வு செய்த பிறகு, இயங்கு நிலையில் உள்ள படகுகளை மீட்டு வருவோம் என்றனா்.