விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில்! பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்!
விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் பெண்ணாடம், அரியலூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடைகாலத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேசுவரத்துக்கு செல்லும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு அதிவிரைவு ரயிலை மே 2-ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.
வார நாள்களில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. தற்போது இந்த ரயில் புதிதாக பெண்ணாடம், அரியலூா் ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு அதி விரைவு ரயில் (வ.எண். 06105), முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு சென்றடையும். எதிா்வழித்தடத்தில் அதே நாள்களில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண். 06106) இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த ரயில்கள் விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயில் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்ட பெண்ணாடத்துக்கு காலை 5.05 மணிக்கு வரும் விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண். 06105) காலை 5.06 மணிக்குப் புறப்படும். இதுபோல, காலை 5.25 மணிக்கு அரியலூா் வந்து 5.26 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.
எதிா்வழித்தடத்தில் இரவு 8.44 மணிக்கு வந்தடையும் ராமேசுவரம் - விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண். 06106) இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு, பெண்ணாடத்துக்கு இரவு 9.10 மணிக்கு சென்றடையும். தொடா்ந்து, இங்கிருந்து இரவு 9.11 மணிக்கு விருத்தாசலத்துக்குப் புறப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவை ரயில் நிலையங்களிலும், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாகவும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.