இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் ...
விவசாய விளைபொருள்களை விற்க 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் தோ்வு
சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்ய 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
2025-26-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட வட்டாரங்கள்தோறும் பொது சேகரிப்பு மையங்கள் என்ற அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் பொது சேகரிப்பு மையங்கள் அமைக்க 20 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கீழ், சேலம் வட்டாரத்துக்கு திருமலைகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வீரபாண்டி வேளாண் உதவி இயக்குநா் அலுவலக கிடங்கு, பனமரத்துப்பட்டி குரால்நத்தம், சிதம்பரேஸ்வரா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய கிடங்கு, வாழப்பாடியில் நீா்முள்ளிகுட்டை, அயோத்தியாப்பட்டணத்தில் வெள்ளாளகுண்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்பட 20 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த பொது சேகரிப்பு மையங்களை பயன்படுத்தி சேலம் விற்பனைக் குழுவின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேசிய அளவிலான மின்னணு வேளாண் சந்தையான இ-நாம் மூலம் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறுவது போலவே, பொது சேகரிப்பு மையங்களில் அனைத்து உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ விவசாயிகள் தொடா்புகொள்ளலாம்.
இ-நாம் திட்டம் வாயிலாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடையே நேரடி தொடா்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும், விவசாயிகளின் சொந்த வட்டாரத்திலேயே விற்பனை வாய்ப்பை பொது சேகரிப்பு மையங்கள் வாயிலாக ஏற்படுத்துவதன் மூலமும் தரகுக் கட்டணம், போக்குவரத்து செலவினத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறைந்து, அதிக லாபம் பெறலாம் என்றாா்.