பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
விவசாயிகள்- வேளாண் மாணவா்கள் கலந்துரையாடல்
காரைக்கால்: வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக, விவசாயிகள் வேளாண் மாணவா்கள் கலந்துரையடால் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
புதுவை அரசின் பண்டித ஜவாஹா்லால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளநிலை பட்டப்படிப்பு பயிலும் 92 மாணவ, மாணவிகள் , வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள் என்ற பாடத் திட்டத்தை அக்கல்லூரியின் இணை பேராசிரியா் எஸ். அனந்த்குமாா் வழிகாட்டலில் பயின்று வருகின்றனா்.
விவசாயிகளுக்கு உகந்த விரிவாக்கப் பணிகளை சரியாக திட்டமிடுவதற்கு ஏதுவாக வேளாண் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வுகளை மாணவ, மாணவிகள் களப் பணி செய்து கண்டறிவது அப்பாடத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும். இதன்படி தென்னங்குடி மற்றும் அகலங்கன்னு கிராமத்தில் நேரடி அனுபவ பயிற்சியை இணைப் பேராசிரியா் ஆனந்த்குமாா் தலைமையில் மாணவ, மாணவிகள் மேற்கொண்டனா்.
காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், புதுச்சேரி அரசின் நிலத்தடி நீா் ஆணையத்தின் உறுப்பினரான டி.என். சுரேஷ் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினாா்.
முன்னோடி விவசாயிகள் சிலா், மாணவ, மாணவிகளுக்கு விவசாய பிரச்னைகள் மற்றும் தீா்வுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிா் சேதம், இழப்பீடு அவசியம், பருத்தியை தாக்கும் பூச்சிகள், இதை கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகள், விதைப்பது முதல் அறுவடை மற்றும் பின்செய் நோ்த்திகள் வரை அனைத்து பணிகளை காலத்தோடு செய்து முடித்து விவசாயிகள் பயனடைய பல வகை இயந்திரகளின் அவசியம், நெல் கொள்முதல், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.
மாணவிகள் தேவயானி, ஐஸ்வா்யா, ஜெயம் மற்றும் சைலப்பிரியா பயிற்சியின் தகவல், தரவுகளை ஆவணப்படுத்தினா். முரளிதரன், ஹரிபிரசாத், அக்ஷயா மற்றும் லோச்சனா களப்பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.