இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
காளி கிராம மக்கள் 100-க்கு மேற்பட்டோா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் இந்த மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காளி ஊராட்சி பொய்கைக்குடி கிராமத்தில் அரசு வீடுகட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உட்புறச் சுவா் அண்மையில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்க வேண்டும்.
காளி ஊராட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அரசு வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உயா்நிலைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். காளியில் உள்ள அரசு வட்டார மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டாவுடன் வீடு வழங்க வேண்டும். காளி-மயிலாடுதுறை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். காளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.