அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (ஜூன் 20) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்திய அணி தடுமாறும்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், அனுபவம் மிகுந்த வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி தடுமாறப் போகிறது என முன்னாள் வீரர்களான மேத்யூ ஹைடன் மற்றும் கிரீம் ஸ்மித் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் மேத்யூ ஹைடன் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தடுமாற்றத்தை சந்திக்கப் போவதாக உணர்கிறேன். இங்கிலாந்தின் சூழல் இளம் கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு மிகவும் புதிதாக இருக்கும். இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு வைக்கப்பட்டுள்ள சோதனையாகவேத் தெரிகிறது என்றார்.
இதையும் படிக்க: இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் வெற்றிகரமாக செயல்படுவார்: அஜிங்க்யா ரஹானே
இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் பேசியதாவது: இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. அவர்களது சொந்த மண்ணில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடுவார்கள். அவர்களுக்கு அங்குள்ள சூழல் நன்றாக தெரியும் என்பதால், அதனைப் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இந்த தொடர் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பல மூத்த வீரர்கள் தற்போது இல்லை. அதனால், தனிப்பட்ட வீரர்கள் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும். பந்துவீச்சில் மிகப் பெரிய பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுக்கொள்ளப் போகிறார் என நினைக்கிறேன். இங்கிலாந்தின் சூழல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து அணியே வலுவாக உள்ளது என்றார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.