அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
‘எஸ்சிஓ’ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு: ராஜ்நாத் சிங் சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே 2020-இல் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மூத்த இந்திய அமைச்சா் ஒருவா் சீனாவுக்கு முதல்முறையாக செல்கிறாா்.
சீனாவின் கிங்டாவோ நகரில் ஜூன் 25 முதல் 27 வரை எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அடுத்த வாரம் சீனா செல்லும் ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜுன்னுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த டிசம்பா் மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் எல்லை விவகாரங்கள் குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி உடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.