அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!
சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியதால், உலகளவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் செலவுகளைக் குறைப்பதற்காக, சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி (USAID) நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, நிதியுதவி இழப்பால் உலகம் முழுவதும் பலவீனமான மக்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாய், சேய் சுகாதாரப் பாதுகாப்பு, காசநோய் தடுப்பு, மலேரியா கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற பல முக்கிய திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நிதி நிறுத்தத்தால், 2030 ஆம் ஆண்டுக்குள்ளாக, உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்றும், அவற்றில் 45 லட்சம் பேர் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளாகவே இருப்பர் என்று தி லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இது உலகளாவிய குழந்தை இறப்பு விகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2001 முதல் 2021 வரையிலான 20 ஆண்டுகளில், அமெரிக்காவின் நிதியுதவியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 133 நாடுகளில் 3 கோடி குழந்தைகள் உள்பட 9.1 கோடிக்கும் அதிகமானோரின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
எச்.ஐ.வி, மலேரியா, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் நிதியுதவி முக்கிய பங்காற்றின.
இந்த நிலையில், நிதி நிறுத்தப்படுவதால் மேற்கூறிய நோய்ப் பாதிப்புகள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வறுமையின் காரணமாக பசி பட்டினியில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்களும் பாதிக்கப்படுவதால், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பாதிப்படையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இதையும் படிக்க:ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!