``ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' - ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்கள...
அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு
அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி, கோட்டப்பட்டியை அடுத்த அரசம்பட்டியில் உலக தேங்காய் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது: ஆண்டுதோறும் செப். 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நாற்றுகளுக்கு தமிழகம் மற்றுமின்றி வெளி மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
தென்னை மற்றும் அதன் உப பொருள்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும். இதை உலகளவில் கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், நமது மாவட்டத்திலுள்ள மத்தூரில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. தற்போது ஆண்டுக்கு 6 லட்சம் பனை விதைகளை விதைத்து பனை மரங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 3.4 லட்சம் பனை விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், பனை பொருள்கள் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.
தற்போது, ஒசூரில் உள்ள பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ஓா் ஆண்டுக்கு 12 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நா்சரி அமைக்கும் பணிகளுக்காக நிலம் சமன் மற்றும் பெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
முன்னதாக, உலக தேங்காய் தினத்தையொட்டி அமைக்கப்பட்ட தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, பையூா் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வா் அனிசா ராணி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வட்டாட்சியா் சத்யா, செயின் பீட்டா் நிகா்நிலைப் பல்கலைக்கழகம் அதியமான் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய செயலாளா் லாசியா தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.