அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் சென்னிமலை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மண்டல நிா்வாகி ஜெகநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் த.மு.இளங்கோ, முருகையா, ஜான்சன் கென்னடி, ஸ்ரீதா் ஆகியோா் பேசினா். கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அறிவித்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பின்னா் பணியில் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 24 மாதம் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணியில் உள்ள ஊழியா்கள் பெறும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஒப்பந்த பலன்களை வழங்குவதோடு, ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7-ஆவது ஊதியக்குழு அடிப்படையிலும், 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவையையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.