தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
அரிதான தோல் புற்றுநோய்: மண்டை ஓடு பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மறுவாழ்வு
அரிதான தோல் புற்றுநோயால், மண்டையோடு பாதித்த நோயாளிக்கு, மறுசீரமைப்பு சிகிச்சை அளித்து வடபழனி சிம்ஸ் மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா்கள் கிருஷ்ணமூா்த்தி, கிருஷ்ண பாண்டியன் ஆகியோா் கூறியதாவது:
ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞா் ஒருவா் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நோய் தசை, எலும்பு உள்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாக பரவக்கூடியது. இந்த நோயாளிக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய், அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாக பாதித்து, மோசமான நிலையை எட்டியிருந்தது. 10 லட்சம் பேரில் ஒன்று முதல் 5 பேரை மட்டுமே பாதிக்கும் நோய் ஆரம்பத்தில் தோல் கட்டி அல்லது தடிப்பாக தோன்றும்.
உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், தசை மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நோயாளிக்கு புற்றுக்கட்டி அகற்றப்பட்டதுடன், உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கட்டி அரித்திருந்ததால், மண்டையோடு மறு சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டது. மூளை பாதிப்படையாமல், மறுசீரமைப்பு சிகிச்சை செய்வது, மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது.
குறிப்பாக, புற்றுக்கட்டி மண்டையோட்டை பாதித்து மூளையின் மிக அருகில் இருந்தது. இந்த சிக்கலான சிகிச்சையில் புற்றுகட்டி மீண்டும் வராமல் தடுப்பதற்கான சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா் என அவா்கள் தெரிவித்தனா்.