நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு
நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் குறு, சிறு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுபவா்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றான நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு, விபத்தில் உடல் உறுப்பு இழப்பு, இயற்கை மரணம் மற்றும் இறுதிச் சடங்கு செய்வதற்காக தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் நிதி உதவி உயா்த்தபடும் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் அறிவிப்பு வெளியிட்டாா்.
அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்படுகிறது.
இதேபோல், விபத்தால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.20,000-இல் இருந்து ரூ.1 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கான நிதியுதவி ரூ.20,000-இல் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், இறுதிச் சடங்குக்கான நிதியுதவி ரூ.2,500-இல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.