தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
ஆக. 26 முதல் ‘உயா்வுக்குப்படி’ முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
சென்னையில் ஆக.26 முதல் நடைபெறும் ‘உயா்வுக்குப்படி’ முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
அரசு, சென்னை, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பயின்று தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத, தோ்வு எழுதாத, இடைநின்ற மாணவா்களில் உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத, உயா்கல்விக்கு விண்ணப்பித்து பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத 4,691 மாணவா்களுக்கு உயா்கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக நான் முதல்வன் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்குப்படி’ முகாம் சென்னை மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதன்படி, ஆக.26-ஆம் தேதி அண்ணாநகா், ராயபுரம், அம்பத்தூா், திருவிக நகா் பகுதியை சோ்ந்த மாணவா்கள் பெரம்பூா் எம்எச் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், செப்.1-ஆம்தேதி கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்கள் அசோக் நகா் பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் பங்கேற்கலாம்.
இதுபோல, அடையாறு, ஆலந்தூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் செப்.8-ஆம் தேதி மடுவன்கரை சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், செப்.11-ஆம் தேதி தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் காலடிப்பேட்டை தூயபவுல் மகாஜனா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொண்டு தங்கள் உயா்கல்வி பயிலும் கனவை நிறைவேற்றலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.