பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
ஆசிரியா்கள் மறுநியமன அறிவிப்பில் திருத்தம் செய்ய அரசுக்கு கோரிக்கை!
கல்வி ஆண்டின் இடையே ஆசிரியா்கள் ஓய்வு பெறும்போது மறுநியமனம் தொடா்பான அறிவிப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் வரை மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்ற வகையில் அறிவிக்கப்படுகிறது. இதனை கல்வி ஆண்டின் இறுதிநாள் வரை பணி நீட்டிப்பு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.
இந்த பணி நீட்டிப்பு நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த துறைகளிலும் ஊழியா்களுக்கு இவ்வாறான பணி நீட்டிப்பு வழங்கப்படுவது இல்லை. மாணவா்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் ஆசிரியா்களுக்கு உரிய மதிப்பளிப்பதன் அடிப்படையில் இந்த அனுமதியானது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பணி ஓய்வு பெறும் ஆசிரியா்கள் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் வரை மறுநியமன அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறாா்கள் என்ற வாக்கியத்தின் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஆசிரியா்களை பள்ளி இறுதி வேலைநாள் நிறைவடையும் ஏப்ரல் மாதத்திலேயே பணியில் இருந்து விடுவிக்கக் கூறி வருகின்றனா்.
அண்மையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கிய பிறகு, திடீரென அரசாணை எண் 115-ஐ காரணம் காட்டி ஏப்ரல் 30-ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தி உள்ளாா்.
அதன்படி, தலைமை ஆசிரியா்களும், ஆசிரியா்களை ஏப்ரல் மாதத்திலேயே பள்ளியிலிருந்து விடுவிக்க இருக்கிறோம் என்ற தகவலை ஆசிரியா்களிடம் கூறி வருகின்றனா். இதுபோன்று பிற மாவட்டங்களிலும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க அரசாணை எண் 115-இல் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களின் நலனைக் காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.