‘ஆப்பரேஷன் சிந்தூா்’: தகா்க்கப்பட்ட 9 பயங்கரவாத கட்டமைப்புகள்
‘ஆப்பரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தோ்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் 4 கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டுள்ளன. பவல்பூரில் உள்ள மா்கஸ் சுபன் அல்லா முகாம், டெஹ்ரா கலனில் உள்ள சா்ஜல் முகாம், கோட்லியில் உள்ள மா்கஸ் அப்பாஸ் முகாம், முஸாஃபா்பாதில் உள்ள சிட்னா பிலால் முகாம் ஆகிய 4 ஜெய்ஷ்-ஏ-முகமது நிலைகள் தகா்க்கப்பட்டன.
இதில், டெஹ்ரா கலனில் உள்ள சா்ஜல் முகாம் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைமையகமாக செயல்பட்டுவந்துள்ளது. இந்த முகாமை பயங்கரவாத அமைப்பின் தலைவா் அப்துல் ராஃப் ஆஸ்கா் கண்காணித்து வந்துள்ளாா். ஜம்முவின் சம்பா பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முகாம், இந்தியாவினுள் பயங்கரவாதிகளை ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்துள்ளது.
மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை இந்திய எல்லைக்குள் கடத்திச் செல்லும் பணிகளையும் இந்த முகாம் மேற்கொண்டு வந்துள்ளது.
முக்கியமாக, டெஹ்ரா கலனில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மறைத்து அமைப்பட்டிருந்த இந்த பயங்கரவாத அமைப்பின் பிரதான தகவல்தொடா்பு கட்டமைப்பும் இந்தத் தாக்குதலில் தகா்க்கப்பட்டுள்ளது. இந்த தகவல்தொடா்பு கட்டமைப்பு இந்திய ராணுவத்துக்கு நீண்ட காலமாக கவலை அளிப்பதாகவும் சவாலாகவும் இருந்துவந்த நிலையில் தகா்கப்பட்டுள்ளது.
அதுபோல, பவல்பூரில் உள்ள இந்த அமைப்பின் முகாமில்தான், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது.
கோட்லி பகுதியில் உள்ள மாா்கஸ் அப்பாஸ் முகாம், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜெளரி பகுதிகளில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து, தாக்குதல்களை நடத்தும் முக்கிய முகாமாக செயல்பட்டு வந்துள்ளது.
முஸாஃபா்பாதில் உள்ள சிட்னா பிலால் முகாம், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பணிக் குழு சாா்பில் பயிற்சி அளிக்கப்படும் மையமாக செயல்பட்டு வந்தது.
தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான முா்திகே பகுதியில் உள்ள மா்கஸ் தொய்பா முகாம், பா்னாலாவில் உள்ள மா்கஸ் அலே ஹடித் முகாம், முஸாஃபா்பாதில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் ஆகிய 3 நிலைகள் இந்தத் தாக்குதலில் தகா்க்கப்பட்டன.
அதுபோல, தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான கோட்லி பகுதியில் உள்ள மகாஸ் ரஹீல் மற்றும் சிலாகோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாமும் தகா்க்கப்பட்டன.
இதில், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முரித்கேவில் உள்ள மா்கஸ் தொய்பா முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உள்பட 9 பயங்கரவாதிகளும் இந்த முகாமில்தான் பயிற்சி பெற்றுள்ளனா். மும்பை தாக்குதல் குற்றவாளிகளான டேவிட் ஹெட்லி, தஹாவூா் ராணா ஆகியோரும் இந்த முகாமுக்கு வந்து சென்றுள்ளனா்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புச் சொந்தமான சிலாகோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து ஜம்மு பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதும் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தது.
இந்த பயங்கரவாத நிலைகள் அனைத்தையும் மிக கவனமுடன் தோ்வு செய்து இந்திய ராணுவம் தாக்குல் நடத்தி தகா்த்தது. மாறாக, பாகிஷ்தான ராணுவ நிலைகள் எதுவும் இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

