இடைத்தேர்தல்: நடுவிரலில் மை வைத்து அவமதித்தாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு!
மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்கம், கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஜூன் 19) காலை தொடங்கி நடைபெற்றது.
கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாபின் லூதியானா (மேற்கு) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் கோஷ் போட்டியிட்டார். இவர் டெபக்ராமில் உள்ள 173-வது பூத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இவர் வாக்கு செலுத்தியபின்னர், தேர்தல் அதிகாரிகள் இவரின் நடுவிரலில் மை வைத்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த ஆஷிஷ் கோஷ் வேண்டுமென்றே ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பூத் ஏஜண்டுகள் நடுவிரலில் மை வைத்து தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆஷிஷ் கோஷ் கூறும்போது, “முதலில் நான் வாக்களிக்கச் சென்றபோது அவர்கள் என் கையில் மை வைக்கவில்லை. வாக்களித்துவிட்டு திரும்பிச் சென்று கேட்டபின்னர் வேண்டுமென்றே அவர்கள் என்னுடைய நடுவிரலில் மை வைத்துவிட்டனர்.
இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இது திரிணமூல் காங்கிரஸின் சதியே தவிர, வேறு எதுவுமில்லை. அவர்கள் அவமானப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு செய்துள்ளனர்” என்றார்.
பாஜக வேட்பாளரின் குற்றச்சாட்டுகளால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.