சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்
இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. காரணம் என்னவென்றால், இந்த ஆதரவினால், சீனாவின் நன்மதிப்பு குறைந்து விடும் என்பதால்தான் என்று உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.
காரணங்களாக அவர்கள் கூறுவது:
சீனா பெரும்பாலும் வெளிப்படையாக ஆதரவளிக்காமல், மறைமுகமாகவே ஆதரவளிக்கிறது. மறைமுகமான அழுத்தத்தின் மூலம் சமிக்ஞையைத்தான் சீனா ஆதரிக்கிறது. ஆயுதங்கள் விநியோகம், ஐ.நா.வில் ஆதரவு முதலானவை மூலம் சீனாவுக்கு ஆதரவளிப்பதில் சீனா கவனமாக செயல்படுகிறது எனலாம்.
உலகளவில் பயங்கரவாதத்தை சீனா கண்டிக்கிறது. அதே வேளையில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் தடை நடவடிக்கைகளை, தனது ராஜதந்திர செயல்கள் மூலம் தடுத்து வருகிறது. உலகுக்கு அமைதியின் காதலனாக இருக்கும் அதே வேளையில், பாகிஸ்தானுக்கு விசுவாசத்தையும் நம்பகத்தன்மையையும் அளிக்கிறது. இது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய இரட்டை விளையாட்டைக் காட்டுகிறது.
இந்தியாவுடன் ஆண்டுதோறும் பெரியளவிலான வணிகத்தை சீனா கொண்டுள்ளது. வருடாந்திர வர்த்தகம், 140 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான வெளிப்படையான ஆதரவு, சீனாவை கடுமையாகத் தாக்கும். சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இத்தகைய குறிப்பிட்ட பொருளாதார கூட்டாண்மையை சீனா ஒருபோதும் ஆபத்தில் தள்ள முயற்சி செய்யாது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலால், சீனாவின் பில்லியன் டாலர் கணக்கான முதலீடுகளை நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கும். இதனிடையே, பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மீதான தாக்குதல்களாலும், பாகிஸ்தான் மீது சீனாவுக்கு மனக்கசப்பு இருந்து வந்தது.
2020 ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - சீனா இடையே எல்லைப் பதற்றம் உருவானது. இருப்பினும், இந்தப் பதற்றத்தைக் குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால், அதன் தாக்கத்தையும் சீனா அறிந்திருக்கும். இதன் மூலம் சீன தொழில்நுட்பங்களுக்கு இந்தியா அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் அபாயம் இருப்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கலாம்.
உலகின் தெற்குப்பகுதியில் வளர்ச்சி, நிலைத்தன்மை, அமைதியான வாழ்வைப் பாதுகாக்கும் கூட்டணியின் தலைவராகும் முயற்சியில், தன்னை சீனா ஈடுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு வெளிப்படையான ஆதரவு, இந்த நல்ல பிம்பத்தை கடுமையான குறைமதிப்புக்கு உள்படுத்தும். அமைதியை விரும்பும் நாடுகளிடையே நம்பிக்கையை அழிக்கும்.
அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவு கொண்டிருப்பதை சீனா விரும்பவில்லை. தற்போது, பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு மேம்பட்டு விடும் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.