இபிஎஸ் சுற்றுப்பயணம் ரவுண்ட் அப்: சாமி தரிசனத்தோடு தொடக்கம்; அதிமுக நிர்வாகிகளிடம் பிக்பாக்கெட்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன் முதற்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துடன் இன்று காலை சுற்றுப்பயணம் தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து, விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அவர்கள் முன்வைத்த வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "எனக்குப் பிரதான தொழிலே விவசாயம்தான். வேறு எந்தத் தொழிலும் இல்லை. அதனால்தான் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
விவசாயத்தில் உள்ள கடினங்களை நான் நன்கறிவேன். ஒரு தாய் குழந்தையைப் பார்ப்பது போல, கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டும்.
இந்தியாவிலேயே சொட்டு நீர்ப் பாசனத்துக்கு அதிக மானியம் பெற்றோம். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் வகையில் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்தோம்.
நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களை, இப்போதைய ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுவிட்டனர். கால்நடை வளர்ப்பு, மும்முனை மின்சாரம் கொண்டு வந்தேன்.
நானே விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவன் என்பதால், மீண்டும் நம் ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

யானை, காட்டுப் பன்றிகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதன் வேதனையை நான் அறிவேன்.
செங்கல் உற்பத்தி தொழில் இந்த ஆட்சியில் நசுங்கி வருகிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன்.
அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் செங்கல் உற்பத்தி மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் கட்டண உயர்வால் நெசவாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
பொதுமக்களுடன் ஒருவனாக இருப்பதால், அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் நீங்கள் கேட்காத கோரிக்கைகள்கூட நிறைவேற்றப்படும். அதை இப்போது சொன்னால் வெளியில் தெரிந்துவிடும். ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்" என்று பேசினார்.
மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம் காந்தி சிலை அருகே சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில், மண்டபத்தின் முன்பு வாகனங்கள் திரளாகக் கூடிய சமயத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது, அ.தி.மு.க பிரமுகரும், தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவருமான தங்கராஜ் என்பவரின் பாக்கெட் பிளேடால் அறுக்கப்பட்டு , ரூ.1 லட்சம் பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது.
இதேபோல நெல்லித்துறையைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.50,000, அபு என்பவரிடம் ரூ.2,500 பிக்பாக்கெட் அடிப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.