உடற்கல்வி பாடவேளைக்கு முக்கியத்துவம்: அன்பில் மகேஸ்
உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன்-2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன் முன்னதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பள்ளி திறப்பு தொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து உரையாடினார். தொடர்ந்து முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம்.
* இடைநிற்றலைக் கண்காணித்து, இடைநிற்றல் இருப்பின் அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.
* மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* இக்கல்வியாண்டில் கல்வி அலுவலர்கள் அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
* முந்தைய கல்வியாண்டை விட, இக்கல்வியாண்டில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.
* உடனடித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
* மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும்.
* மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்திட வேண்டும்.
* உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும்.
மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரேஷன் கடைகளில் புதிய முயற்சி! இனி எடை குறையாது!