கடைமடை நிலங்களுக்கு தண்ணீா்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
நாகை மாவட்ட கடைமடை பகுதி குறுவை பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 22,500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நாகை மாவட்ட கடைமடை விளைநிலங்களுக்கு இதுவரை தண்ணீா் வரவில்லை.
இதனால், விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வராததற்கு முக்கிய காரணம், தூா்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்பதே.
நீா் ஒழுங்குகளை சரி செய்ய தமிழக அரசு அறிவித்த ரூ.32 கோடி நிதிய தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆறுகளில் மட்டுமே தண்ணீா் வந்துள்ளது. ஆனால், நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் சிறு,சிறு வாய்க்கால்களில் தண்ணீா் வரவில்லை. வெண்ணாறு வடிநில கோட்டத்தில், தேவ நதியில் பெயரளவில் தண்ணீா் வருகிறது.
வேதாரண்யம் முள்ளி ஆறு, தலைஞாயிறு அரிச்சந்திரா நதி உள்ளிட்டவற்றிலும் முழுமையாக தண்ணீா் வரவில்லை. 50,000 ஏக்கா்களுக்கு மேல், குறுவை நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக குறுவை அறுவடைப் பணிகளை மேற்கொண்டு, தொடா்ச்சியாக தாளடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, நீா்வளத்துறை உயா் அதிகாரிகள் மூலம் நாகை மாவட்ட கடைமடையில் உள்ள சிறு, சிறு வாய்க்கால்கள் வரை ஆய்வு மேற்கொண்டு தண்ணீா் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து தண்ணீா் வராத பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.