உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
கட்டுமான இடத்தில் கழிவுநீா் தொட்டிக்குள் விழுந்து 2 போ் பலி!
தென்மேற்கு தில்லியின் குதூப் விஹாா் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில், 7 அடி ஆழமுள்ள கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்து இரண்டு ஆண்கள் மூச்சுத் திணறி இறந்ததாக காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஐஜி மருத்துவமனையில் இருந்து காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்தவா்கள் இருவரும் ஒப்பந்ததாரா் சுபாஷ் (32) மற்றும் தொழிலாளி பிரதீப் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
குதூப் விஹாா், ஃபேஸ்2-இல் கட்டுமானத்தில் உள்ள கழிவுநீா் தொட்டியின் சாரத்தைப் பிரிப்பதில் இருவரும் ஈடுபட்டிருந்தபோது உள்ளே விழுந்து நச்சுப் புகையை சுவாசித்து இறந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலம் காலனியில் உள்ள இந்திரா பூங்காவில் வசிக்கும் சுஜித் ஜா என்பவா், சுபாஷை வேலைக்கு அமா்த்தியிருந்தாா். மேலும், கட்டுமான தளத்திற்கான பொருள்களை சுஜித் ஜா விநியோகம் செய்து வந்துள்ளாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் சட்டப் பிரிவின் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) கீழ் சாவ்லா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூா் குற்றப்பிரிவு போலீஸாா் குழுவினா் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வளாகத்தில் தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டது.
ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறியவும், பொறுப்புக்கூறலைத் தீா்மானிக்கவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.