காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!
மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திருத்தத்திற்கு மத்தியில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், கடந்த மூன்று அமர்வுகளாக சரிந்த பிறகு, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை அளவுகோலான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து முடிந்தன.
மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்த நிலையில், அதற்கு ஆதரவாக அந்நிய நிதி வரத்து அதிகரித்ததால், உள்நாட்டில் பங்குச் சந்தை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சீரான தொடக்கத்திற்குப் பிறகு சென்செக்ஸ் 1,132.62 புள்ளிகள் உயர்ந்து 82,494.49 ஆக இருந்தது. பிறகு மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,046.30 புள்ளிகள் உயர்ந்து 82,408.17 ஆகவும் 50-பங்கு கொண்ட நிஃப்டி 319.15 புள்ளிகள் உயர்ந்து 25,112.40 ஆக நிலைபெற்றது.
மத்திய கிழக்கு பதற்றம் தணிந்ததால், ஈரானுடனான அமெரிக்க பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடியான ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதால், பங்குச் சந்தை குறியீடுகள் உயர்ந்தன. இந்த முன்னேற்றத்தால் கச்சா எண்ணெய் விலை சரிசெய்து கொள்ள வழிவகுத்தது. இது உள்நாட்டு சந்தைகளுக்கு சாதகமாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உணர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் பெறிதும் வழிவகுத்தது.
சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், நெஸ்லே, மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, எடர்னல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை உயர்ந்தும் இதற்கு நேர்மாறாக ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி ஆகியவை சரிந்தும் முடிந்தன.
நிஃப்டி-யில் ஜியோ பைனான்சியல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பாரதி ஏர்டெல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிரென்ட் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
இந்த வாரத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் தலா 1.6 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
அனைத்து துறை குறியீடுகளும் இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்து முடிவடைந்தன. உலோகம், பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் மூலதன பொருட்கள் 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
கெய்ன்ஸ் டெக் நிறுவனம் ரூ.1,600 கோடி வரை திரட்ட கியூஐபி (QIP)-ஐ தொடங்கிய பிறகு அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% அதிகரித்த நிலையில் ரூ.440 கோடி மதிப்புள்ள பங்குகள் பிளாக் டீலில் பரிமாறப்பட்டதால் நார்தர்ன் ஆர்க் கேபிடல் பங்குகள் 2 சதவிகிதம் வரை சரிந்தன.
மாறன் சகோதரர்களுக்கு இடையேயான பங்குகள் தொடர்பான சட்ட தகராறில் சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 1% வரை சரிந்து முடிவடைந்தன.
10% பங்குகள் கைமாறிய பிறகு சாய் லைஃப் சயின்சஸ் பங்குகள் 7 சதவீதம் அதிகரித்த நிலையில் ஐரோப்பிய நிறுவனத்துடனான கூட்டாண்மையில் ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ் பங்குகள் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஹூண்டாய் மோட்டார், ஐடிடி சிமென்டேஷன், ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, பாரதி ஏர்டெல், ஆதித்யா பிர்லா கேபிடல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 80 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.
ஜூன்டீன்த் கொண்டாட்டத்திற்கு அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.93 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 77.33 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.934.62 கோடி மதிப்புள்ள பங்குகளையும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.605.97 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35% சரிவு