கேரள காங்கிரஸ் தலைவராக சன்னி ஜோசப் நியமனம்: ராகுல் வாழ்த்து
புது தில்லி: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்பிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் மாநிலத்தின் நீதி மற்றும் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால், அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் மாநிலமான கேரளத்தில் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள கே.சுதாகரன் எம்.பி.க்கு பதிலாக மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து வரும் சன்னி ஜோசப் நியமிக்கப்படலாம் என செய்திகள் வௌியாகின.
இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள காங்கிரஸ் தலைவராக கண்ணூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், பேராவூர் எம்எல்ஏவுமான சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளராக அடூர் எம்பி பிரகாஷ், கேரள காங்கிரஸ் புதிய செயல் தலைவர்களாக எம்எல்ஏ பி.சி.விஷ்ணுநாத், எம்எல்ஏ ஏ.பி.அனில் குமார் மற்றும் எம்பி ஷாபி பரம்பில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுநாத் ஏஐசிசி செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சுதாகரன் காங்கிரஸ் காரியக் குழுவிற்கு நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி!
ராகுல் வாழ்த்து
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கேரள காங்கிரஸ் தலைவர் எம்எல்ஏ சன்னி ஜோசப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் கேரளத்தின் நீதி மற்றும் மாநில முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் கேரள மக்களுக்கும் பலத்தின் தூண்களாகவும் சேவை மனப்பான்மையும் கொண்ட ஒரு அச்சமற்ற போர்வீரன் கே.சுதாகரன் என கூறியுள்ளார்.
மாநிலத் தலைவர் பதவியில் இருந்து சுதாகரன் நீக்கப்பட்டதற்கு அவரது விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்கள் எவ்வாறு பதிலளிக்க போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.