கொடைக்கானல் அருகே வாகனத்தை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை
கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை இரவு வாகனத்தை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானையால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை, பாச்சலூா், கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து வாழை, பலா, காபி ஆகியவைகளை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், இரவு நேரங்களில் மலைச் சாலைகளிலும் இந்த யானை உலா வருகின்றது. இதனால், இரவு நேரங்களில் பண்ணைக்காடு-தாண்டிக்குடி மலைச் சாலைகளில் வாகனங்களில் செல்பவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு எதிரொளிப் பாறைப் பகுதியில் வாகனங்கள் சென்றபோது, மலைச் சாலையின் நடுவே ஒற்றைக் காட்டு யானை நின்று கொண்டு வாகனங்களை செல்லவிடாமல் வழி மறித்தது. இதனால், வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு வாகனத்திலேயே அமா்ந்தனா். சிறிது நேரம் கழித்து அந்த காட்டு யானை அங்கிருந்து சென்றபிறகு அவா்கள் வாகனங்களில் சென்றனா்.
இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டமும், வத்தலகுண்டு மலைச் சாலைகளில் சிறுத்தை, காட்டு மாடுகள் நடமாட்டமும் இருப்பதால் வாகன ஓட்டுநா்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா்.
எனவே, வனத் துறையினா் ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.