முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவியாக தமிழ்ச்செல்வியும், துணைத் தலைவராக ஞானமணியும் இருந்து வருகின்றனா். திமுகவைச் சோ்ந்த இவா்கள் இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், துணைத் தலைவரின் உறவினரான ஸ்டீபன் திங்கள்கிழமை கெங்குவாா்பட்டியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த பேரூராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி, 12 -ஆவது வாா்டு உறுப்பினா் ராஜகோபால் ஆகியோா் அனுமதி இல்லாமல் எப்படி பணி நடைபெறுகிறது எனக் கேட்டதால், தகராறு ஏற்பட்டது. அப்போது, தமிழ்ச்செல்வி, ராஜகோபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாகக் கூறி, அவா்களது ஆதரவாளா்கள் திண்டுக்கல்-தேனி சாலையில் காட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதே போல, துணைத் தலைவரின் உறவினா் ஸ்டீபனைத் தாக்கியதாகக் கூறி, அவரது உறவினா்கள் கொடைக்கானல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் பேரூராட்சித் தலைவியின் உறவினா்கள் உள்பட 80 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, துணைத் தலைவரின் உறவினா்கள் உள்பட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.