உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம்: நிரந்தர வைப்புத் தொகை சொத்து...
சித்ரா பௌர்ணமி : விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
விழுப்புரம்: சித்ரா பௌர்ணமியையொட்டி விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12 ஆம் தேதிகளில் காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06130), அதே நாள்களில் முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து மே 11,12 ஆம் தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06129), அதே நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மே 11,12 ஆம் தேதிகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06131), அதே நாள்களில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்குச் சென்று சேரும்.
எதிர் வழித்தடத்தில் மே 12,13 ஆம் தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ. எண் 06132), அதே நாள்களில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.