சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி
புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை, காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாகவும், பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீர் நிறுத்தப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்துப் பேசியிருக்கும் அசாதுதீன் ஒவைசி, சிந்து நதிநீரை நிறுத்துவது என்பது மிகச் சிறந்த முடிவுதான், ஆனால், அந்த நீரை எல்லாம் எங்கே தேக்கிவைப்பீர்கள்? மத்திய அரசு, இது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் அதனை நாங்கள் ஆதரிக்கத் தயார். ஆனால், இது ஒன்றும் அரசியல் விவகாரம் இல்லையே என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு இருப்பிடம் அளிக்கும் நாட்டுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டங்களும் அனுமதி வழங்குகின்றன. எல்லாம் சரிதான், ஆனால், தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படாதது ஏன்? பெயரையும் மதத்தையும் கேட்டு பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொண்டிருக்கும்போது, அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு வர ஒரு மணி நேரம் ஆனது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், காஷ்மீர் மக்கள் பற்றியும், காஷ்மீர் மாணவர்கள் பற்றியும் தவறான அவதூறுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புது தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு, உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருந்தார்.