சீனா: வயிற்றுக்குள் டூத் பிரஷுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர் - உடலில் எந்த தொந்தரவும் இல்லாதது எப்படி?
வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ஆண்டுகள் இருந்திருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த யாங் என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி படி, யாங் தனது 12 வயதில் டூத் பிரஷை விழுங்கியதாகவும் இது குறித்து தனது பெற்றோரிடம் சொல்ல பயந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதுவரை எந்தவிதமான அசாதாரணமும் தனது உடலில் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை பரிசோதித்த போது அவரது வயிற்றில் டூத் பிரஷ் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து 80 நிமிடங்களில் அந்த டூத் பிரஷை அகற்றி உள்ளனர்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு நோயாளியின் செரிமான அமைப்பிலிருந்து ஒரு பொருளை அகற்ற மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட மிக நீண்ட நேரம் இது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ”குடலில் இருக்கும் டூத் பிரஷ் அங்கும் இங்கும் நகர்ந்து, திசுக்களை துளைத்து, குடல்களை துளைத்து உயிருக்கு ஆபத்தான நிலையைக்கூட ஏற்படுத்தக் கூடும்.
ஆனால் யாங்கின் விஷயத்தில் இந்த டூத் பிரஷ் அதிர்ஷ்டவசமாக குடலின் ஒரு வளைவில் சிக்கிக் கொண்டது. அதனால்தான் அந்த டூத் பிரஷ் 52 ஆண்டுகளாக அவரது வயிற்றில் அசையாமல் இருந்துள்ளது.
இதனால்தான் அவரின் உடலில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இது நம்ப முடியாத ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.